எழுத்தாளன் ஆகவேண்டும் என்பது என் சின்ன சின்ன ஆசைகளில் இருநூற்றி எழுபத்தி மூன்றாவது.
முதல் பத்து ஆசைகள் விஞ்ஞானியாவதைச் சார்ந்தது. இரண்டாம் பத்தில் இன்ஜின் டிரைவர் (கரி என்ஜின் மட்டும்), இசைக்கலைஞன், இரக்கமுள்ள சினிமா நாயகன், இந்திரியங்கள் அடக்கிய இறைதூதன் போன்ற ஆதர்சங்கள் ஆக்கிரமிக்கும்.
மிச்ச இருநூற்றியைம்பது சொச்சம் ஆசைகள் பெண்கள் பற்றியவை.
அவை எதற்கு இப்போது. எழுத்தாளனைத் தொடர்வோம். அவனே கதைவிட லாயக்கு.
எழுத்து ஒரு தவம் என்பதை சிறுவயதிலேயே அறிந்துகொண்டேன். ஆனால் பெரியவனாகும் வரை தவம் செய்வதற்கான அவகாசம் அமையவில்லை.
ஏனைய சின்ன சின்ன ஆசைகளில் சிலதை முயன்றதில், தவத்தை தொடங்கவிடாமல் கலைத்தவண்ணம் வாழ்வின் மேனகைகள், லோபமுத்ரைகள்.
லஸ் சர்ச் ரோட்டின் தனி வீடு, பத்மா சேஷாத்ரி, ப்ரில்லியண்ட் டியுட்டோரியல்ஸ், ஐஐடி, நோக்கியா விஃபோன் என்று சமுதாயத்தின் மேட்டிமைச் சக்திகள் போட்டியிட்டுக் கைகள் கொடுக்க, முப்பதைத் தப்பும்முன் கணினித் துறையில் கோலோச்சியிருந்தேன். லகரங்களில் வருடாந்திர வரி ஏய்த்து, இளநரையுடன் முதுகுவலிக்கு ‘யோகமந்திரத்தில்’ பிரத்தியேக டிரெய்னருடன் அப்பாயின்மெண்ட் வாங்கி, வீக்கெண்டில் நகரத்தின் அடுக்ககம் துறந்து, வெள்ளைச்சீருடை சாரதி முடுக்க, டிவி வைத்த ஆபீஸ் வண்டியில் ஜாக் டாட்டீ இயக்கிய பிரெஞ்சுக் காமெடிகளை ரசித்தபடி பயணித்து, சேலம் டாக்டர் நண்பருடன் யெர்க்காட்டு காட்டேஜில் இத்தாலிய அஸ்டி வைன் (மட்டும்) பகிர்ந்து… எழுத்தாளனவதை கிட்டத்தட்ட மறந்தேவிட்டேன்.
அடுத்த ஆண்டுகளில் பணியில் அசுரகதியில் தொடங்கி மந்த கதிக்கு மாறி அதுவும் ஒத்துவராமல் மிகமந்த கதிக்குப் பதவி உயர்ந்து, மாதங்கள் ஓய்வாக சில நாட்கள் மட்டும் இதயம் வாய்வழியே வெளியே வந்துபோகும் மேல்நிலைக்குத் தள்ளப்பட்டு, காரியதரிசியின் கால்சிராயை கண்களால் களைந்திருந்த ஒருநாள், தனிமையின் வெறுமையில் சின்ன சின்ன ஆசைகளை மனம் அசைபோட்டது.
பால்யத்தில் தொடைதட்டியிருந்த கர்நாடக சங்கீதம் கேட்பதில் மையம் பெற்று அதே பால்யத்தில் காதைத் திருகியிருந்த தமிழ்க் காதலில் கரையைக் கடந்தது.
அகர முதல எழுத்தை அளிப்பவன் ஆதிபகவன். மும்மூர்திகளின் வடிவம். படைப்பாளி என்பதால் எழுத்தாளன் பிரம்மன். சிருஷ்டித்த பாத்திரங்களைப் பேணுவதில் பரமன். அவனே விமர்சகனும் ஆவான் ஆகையில் சக எழுத்தாளர்களின் ருத்ரன். வாசகர்பால் கொண்ட பேரன்பினால் தன்னையே கூறுகளாக்கி எழுத்தில் அவர்களுக்கு அளிப்பவன். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் பரமனுக்கே. இரண்டு விளைவுகளுமே எழுத்தினால்தான். அளித்தவன் படைத்தவன். பெற்றவன் பாக்கியவான். பெற்றவனும் அளித்தவனும் வாசிப்பில் ஒருவனையொருவன் நிரப்பிக்கொள்கிறான். ஒருவனிடம் எழுத்து எனும் செயல்; அதன் தாக்கத்தின் விளைவே அடுத்தவனுக்கு அவன் செய்யும் செயல். ஒருவனின் செயல் ஒருவனின் விளைவாய். செயல் இல்லையேல் விளைவில்லை. விளைவற்ற செயல் செய்யப்பட்டது என்றறிவது எவ்வாறு? நியூட்டனின் மூன்றாம் விதியும் இதுதானே. பரமாத்மனுக்கும் ஜீவாத்மனுக்கும் அகர முதல எழுத்தில்தான் இணைபிரியா பந்தம்.
கதையாடலில் சொற்கள் சுதந்திரப் பொருளுணர்ந்தன.
கணினிகளைக் கசக்கிக் களைத்திருந்த கார்காலம்.
எழுத்தாள வீச்சம் கூடித்தான் இருந்தது.
நான் எழுத்தாளன் ஆவது அத்தியாவசியமாகியது. எழுதப்படவேண்டிய கதைகள்தான் பாக்கி.
***
முதல் கதைக்கு பெண்களே கூடாது என்று தீர்மானித்திருந்தேன். அவர்களை எழுதத் தொடங்கினால் முடிவேது. அதுவும் எனக்கு.
புதியதாய் வித்தியாசமாய் எழுதுவதற்கு ஒரு ஆணைத் தேடினேன். என்னைப் பற்றியே எழுதலாம்தான். ஆனால் அது நிஜமாகிவிடும். கதாசிரியன் தன்னைப்பற்றி ‘கதை’ எழுத முடியுமா. உண்மையத்தானே சொல்லமுடியும். பிறகு எப்படி அது கதையாகும்.
சுற்றியிருப்பவர்களை உன்னிப்பாய் கவனிக்கத் தொடங்கினேன். தனிப்பட்ட முறையில் கவனித்து எழுத வேண்டும் என்பவர்களை அலைபேசியின் கேமிராவில் சூழ்நிலைக்கேற்ப க்ளிக்கிக்கொண்டேன். அன்றாடங்களில் அலைகிழிந்து அவரைத் தேர்வு செய்தேன். ஒரு கச்சேரியில்.
க்ரீம் நிற முழுக்கைச்சட்டையை சுருக்கமில்லாமல் டெர்லின் பாண்டினுள் டக் இன் செய்து, மடிப்பு கலையாமல் மேடையில் அமர்ந்திருந்தவர், பேச எழுகையில் நெட்டைக்குச்சியான உயரம்தான் என்னை ஈர்த்தது. ஆறேகால் அடியாவது இருப்பார். போடியத்தில் மைக்கை செங்குத்தாக நட்டாலும் குனிந்தே பேசவேண்டியிருந்தது. ஆங்கிலம் கலந்த பிராமணத் தமிழில் தீக்ஷதர் பற்றி அறிவார்த்தமாக அன்று நிறைய பேசினார்.
டாக்டர் பாலகிருஷ்ணன். மருத்துவர் இல்லை; முனைவர். எக்கனாமிக்ஸில். ஐம்பதியைந்திற்குமேல் சொல்ல முடியாத அறுபத்தியிரண்டு வயதானவர். வங்கியில் கடைநிலையில் தொடங்கி சரியான தருணத்தில் சென்னையின் அவுட்டோரில் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் ஆடிட்டராய் நுழைந்து, நிச்சயமாய் சொந்தத் திறமை குயுக்திகளினால் மட்டுமே அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் பொறுப்புவரை உயர்ந்தவர்.
ஒரு கட்டத்தில் தினமும் அதைப்பார்த்தே சவரம் செய்துகொள்ளும் அளவிற்கு பிரபலமாகி தொலைக்காட்சியில் முகம் காட்டியவர், இன்று சற்று அடக்கி வாசிக்கிறார்.
நிறுவனத்தின் நிஜ உரிமையாளர்களின் அஜீரணங்களினால் அடக்கி வாசிக்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் கேள்வி. கிடைக்கும் நிறைந்த ஓய்வில் தன் சங்கீத ஈடுபாட்டை இன்று விருத்தி செய்துகொண்டு வருகிறார்.
சங்கீத சபாக்களின் திறப்பு விழாக்கள், எழுபது வயதைக்கடந்த கலைஞர்களின் பாராட்டு விழாக்கள், இளம் தமிழ் எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழாக்கள், ‘எய்ட்ஸ் விழிப்புணர்வு மரத்தான்’ ஓட்டத்தை தொடங்கிவைத்து உரை, என்று மாதந்தோறும் மேடைகளில் தென்பட்டு சேஷனிலிருந்து சேஷகோபாலன் வரை தோளில் தட்டிப் பேசும் அளவிற்குப் பவிஷு. ஆறுதலாக கர்நாடக சங்கீதத்தில் நிஜமான ஈடுபாடும் உள்ளவர்.
கச்சேரி சர்க்கியூட்டில் அவர் பாலகிருஷ்ணன் இல்லை. பாட்ரன் பாலா.
லகரங்கள் கொடுத்தாலும் கொள்கையாய் கல்யாணக் கச்சேரிகளை ஒப்புக்கொள்ளாத பாடகர்களும் ஒரு தொலைபேசி அழைப்பில் பாட்ரன் பாலாவிற்கு இரவு தூங்கும்முன் வீட்டில் பக்கவாத்தியங்கள் சகிதம் பிரத்தியேகமாய்ப் பாடுவார்கள். தயாள சன்மானம் மட்டும் காரணமில்லை. சென்னையில் தொடங்கி கேரளாவரை பாலா பல சபாக்களின் செயற்குழு உறுப்பினர்.
பாலாவிற்கு தீக்ஷதர் கிருதிகளில் பிரியம் அதிகம். ஈடுபாடு என்றால் அலாதியானது. பாலா முன்னிலையில் “என்ன இருந்தாலும் தியாகையர் போல வருமா. திராட்சை ரசம். தீக்ஷதர் கிருதிகள் வெர்பல் டயேரியா. வார்த்தை வெளிக்கி.” என்ற ரீதியில் மேடையில் முழங்கிய புகையிலை குதப்பும் சங்கீத உபாசகர் மறுநாள் சந்தடியின்றி நகரின் பிரதான சபாவின் காரியதரிசிப் பதவியில் இருந்து ஓய்வுபெற்றுக்கொண்டதாய் அங்கத்தினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நிஜக் காரணம் முணுமுணுக்கப்பட்டது.
தீக்ஷதர் பெயரில் ஒரு டிரஸ்ட் தொடங்கி எப்பல்கலைக்கழகத்திலும் முனைவர் ஆய்விற்கு தீக்ஷதர் கிருதிகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு ஆண்டுதோறும் சன்மானம் வழங்குகிறார் பாலா. டர்ன் புல்ஸ் ரோட்டருகில் உள்ளடங்கி இருக்கும் தன் ‘பாலஸ் ஹவுஸ்’ கிரகத்தில் ஆண்டுதோறும் தீக்ஷதர் நினைவுதினக் கச்சேரிகள் நடத்துவார். பாடும் பிரபலங்கள் பாடவேண்டிய கிருதிகள் பட்டியலை ஃபோன்போட்டுக் கேட்டுக்கொள்வர். கேட்பதற்கு அழைப்பு வந்தால் சென்னையில் நீயும் ஒரு ஆளாகிவிட்டாய் என்று உணர்ந்துகொள்.
இதைத்தவிர தமிழில் சிறுகதைகள் எழுதுவதும் பாலாவிற்கு பொழுதுபோக்காம். ஹிண்டுவில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சொல்லப்போனால், மேற்படி விபரங்கள் கிட்டத்தட்ட அனைத்துமே அவரைப் பற்றிய கதை எழுதவேண்டும் என்று தீர்மானித்த பின்புதான் சிறுகசிறுகத்தான் சேகரித்திருந்தேன். அவருக்காக நோட்டுப்புத்தகமே வைத்திருக்கிறேன். அதில் அந்த ஹிண்டு பேட்டியை கத்தரித்து ஒட்டிவைத்துள்ளேன்.அவர் வீட்டில் பாடிய கிருதிகளின் பட்டியல் ஒன்றைக்கூட ஒரு பிரபலப் பாடகரின் சிஷ்யகேடியின் வாயிலாய் தெரிந்துகொண்டு எழுதிவைத்துக்கொண்டேன். கூடவே, பாட்ரன் பாலா பங்குபெற்றாதாய் கிசுகிசுக்கப்படும் ஓரிரு பாடகிகள் விவகாரங்கள்.
என் கதையும் சிறுகச்சிறுக வளர்கிறது.
***
இதோ இந்தப் பாராட்டுவிழாவிலும் இன்று சந்திக்கிறேன். விழாவின் முதல்கட்டத்தில் மேடையில் பேசிமுடித்து, தொடர்ந்த கச்சேரியைக் கேட்பதற்கு வழக்கம்போல முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் பாட்ரன் பாலா.
கச்சேரி தொடங்கியதும் பின்னாலிருந்து எழுந்து இரண்டாம் வரிசைக்கு இடம் பெயர்ந்துகொண்டேன். அவரை அருகில் கவனிப்பதற்கு.
சுற்றும் முற்றும் அவ்வபோது நோட்டம் விட்டபடி இருந்தார். மற்ற விரல்களை கட்டைவிரலுடன் ஒற்றிச் சரியாகத் தாளம் போட்டார். நாற்காலி இடைவெளியில் தெரிந்த நீல டெர்லின் பாண்ட் மடியில் ஐ-பாட் போல தொடுதிரை வஸ்து. மேல் ஓரம் எச்சில் முத்தம்பெற்ற பாலிமர் குச்சியால் அவ்வப்போது நிரடிக்கொண்டிருந்தார். ஓரிரு முறை எங்கள் கண்கள் சந்திக்கையில் புன்னகைத்தார். தலையால் என் இருப்பை ஆமோதித்தார்.
மங்களம் வரையில் அவரது சேஷ்டைகளை கவனித்ததில் எனக்கு ஓரிரு தாள்கள் நிரம்பியது.
கச்சேரி முடிந்தது. எழுந்து மேடைப்பாடகியிடம் சென்று இருகைகளையும் பிடித்துக்கொண்டு குனிந்து காதுகளில் ஏதோ சொன்னார். கைகளைக்கூப்பிக் குனிகையில் வகிட்டில் குங்குமத்தைக் கடந்த நரை வெளிப்படும் அப்பாடகியும் நிறைவாய்ச் சிரித்தார். சக பக்கவாத்தியக்காரர்களை காட்டி ஏதோ சொன்னார்.
பாட்ரன் பாலா வாய்விட்டுச் சிரித்தார். பற்களில் வெற்றிலைக் காவி இல்லை. தங்கப்பல் எதுவும் தட்டுப்படவில்லை. எல்லாமேவா வித்தியாசமாக இருக்கவேண்டும். எப்படியும் அவருக்குத் தேவையான இடங்களில் மச்சங்கள் இருப்பதுதான் காட்சிகளில் புலனாகிறதே. பெருமூச்சிக்கொண்டேன்.
மேடையவிட்டு இறங்கி நிமிர்ந்தவரிடம் சென்று “ஹலோ சௌக்கியமா” என்றேன். பேசிப்பார்த்தால் ஏதாவது அக்கப்போர்கள் கிடைக்குமே. கதைக்கு உதவும்.
“உங்களை எங்க…. யு ஆர்… நீங்க யாரு, சாரி எனக்கு செத்த மறதி ஜாஸ்தி.”
பாட்ரன் பாலா வழக்கம்போல என்னை மறந்திருந்தார். அல்லது வழக்கம்போல மறந்துவிட்டதுபோல தோரணை காட்டினார்.
சரியான கதா பாத்திரம். அன்றுதான் அறிமுகமாகும் பாடகியை இறுக்கி அனைச்சு உம்மா தராத குறையாய் பரிச்சயம் பாராட்டுகிறார். நான்கைந்து முறையாவது வெவ்வேறு தருணங்களில் சந்தித்து இதே உரையாடலில் தொடங்குபவனை அந்நியப்பட்டு விசனிக்கிறார். என்ன ஒரு முரண். மவனே, நிச்சயம் இவர்தான் என் முதல் கதை நாயகன். நினைத்துக்கொண்டேன்.
நேரில் புன்னகைத்தபடி (மீண்டும் ஒருமுறை) அவருக்குப் பதிலளித்தேன்.
சில மாதங்கள் முன்புதான் அவர் வீட்டு கல்யாணத்திற்குக்கூட சென்றிருந்தேன். வரவேற்று அரைமணி பேசியிருக்கிறார். ‘உங்க வீட்டுக்கு வரணும்னு ரொம்பநாள் பிளான்’ என்றும் கூறியிருந்தார்.
அதை நினைவுறுத்துவதுபோல “உங்க பையன் கல்யாணத்திற்கு வந்திருந்தேன். அப்போ பார்த்தது.” என்று தொடங்கினேன்.
சிவப்புப்பட்டில் அக்குளில் வியர்த்திருந்த காத்திர தேகம், இரட்டைவடம், ரத்னாஹாரம், கோக்குல் சாண்டல், காஷ்மீர் குங்குமம் என்று அருகிலிருந்த அவர் மனைவி அதற்குள் குசுகுசுக்க, சுதாரித்துக்கொண்டார்.
“ஓ… யா. நீங்க சாஃப்ட்வேர் குரு இல்ல. ஹிண்டூலகூட மியூசிக் பத்தி எழுதியிருந்தீங்க ளே. எப்போலேந்து கர்நாட்டிக் கேக்கறீங்க. முப்பது வருஷம் இருக்குமோ? நிறைய நோட்ஸ் வெச்சுருக்கீங்களோ, கே.வி.என். காலத்து கச்சேரிலேந்து? நான் கூட எழுதி வச்சிருக்கேன். வீட்டுக்குப்போய் நாம நோட்ஸ் கம்பேர் பண்ணிக்கனும். நிச்சயம். அடுத்தமுறை நீங்களும் என் வீட்டுக்கு வந்துட்டுத்தான்… அடுத்த முறை என்ன இன்னிக்கே வாங்களேன். இஃப் யு டோண்ட் ஹாவ் அதர் பிளான்ஸ் ஃபார் தி நைட்?”
மேடையில் பேசிக் கேட்பது போலவே, அவரின் ஆறேகால் அடி உயரத்திற்கு சற்றும் தொடர்பில்ல்லாத சன்னமான குரலில் கடகடவென்று பொழிந்தார்.
என் கதையை வளர்த்த நான் அவரை அருகில் கவனிக்கவேண்டும் என்று நினைத்தால், அவரே வீட்டிற்கு அழைக்கிறார். எதிர்பாராமல் அடித்த சான்ஸில் பதில் சொல்ல வாயடைத்து நின்றேன்.
பேச்சில் விழுந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கைகுலுக்கி வேறொரு கண்ணாடிப் பிரமுகர் பாலாவிடம் பேசுவதற்கு இடைபுகுந்தார். வழிவிட்டு வேறு கோணத்தில் திரும்பி, கச்சேரி முடிந்து கலைந்துகொண்டிருந்த சபையை நோட்டம் விட்டேன்.
மிக அருகில் நின்றிருந்தவள் யாருடனோ பேசிமுடித்து என் பக்கமாய்த் திரும்பினாள். ஆத்திக் கட்டியிருந்த அலையும் கூந்தல். அகலமான மையிட்ட விழிகள். நாபிக்கமலம் நாசுக்காய் வெளிப்படும் வகையில் உடுத்தியிருந்த பச்சை பட்டினுள் விம்மியிருந்த நெஞ்சுரத்தில் எனக்கு நெஞ்சு வலித்தது.
விழாவைக் காம்பியர் செய்து தொடக்கத்தில் தெளிவான தமிழில் இறைவணக்கம் கணீரென்று பாடியவள். பார்த்தவுடன் தொட்டுப்பார்க்கவும் அழைக்கும் மிருது. அவள் உணராமல் தொடுவதற்கு மின்திரையில் இல்லை. நேரிலே, முகர்ந்தால் மல்லிகைப்பூ வாசமடிக்க, மிக அருகில் முப்பரிமாணத்தில் நிற்கிறாள்.
அது உன்னைத் தொடாமல் உன்னால் அதைத் தொட முடியாது. நியூட்டனின் மூன்றாம் விதிக்கான உதாரணம். விஞ்ஞானி ஆசையில் தேங்கிய விஷயங்களில் ஒன்று மனத்தில் மல்லிகைப்பூ வாசத்துடன் எழுந்தது. தொடாமல் தொட முடியாது.
புன்னகைத்தேன்.
யா…
வளை குலுங்கத் தலை கோதி, விழிகளில் சிரித்தாள்.
ஹலோ; உங்களுக்குத் தமிழ் தெரியுமா; டு யூ நோ டமில்?
ஷ்யூர். ஏன்யா, என்ன பார்த்தா அப்டியா இருக்கு. தமிழ் பொண்ணுதான் நான்.
ஓ, சாரி. இல்ல பாடறவா சாதாரணமா தமிழ் பேசத்தெரியாதும்பா. அப்பப்போ கவனிச்ருக்கேன். தமிழ்ல கேட்டா இங்க்லீஷ்லதான் பதில் சொல்லுவா. பாராட்டி எழுதிக்கொடுத்தாலும் தமிழ்ல படிக்கமாட்டா. ஏதாவது திட்டினாத்தான் ஆள் வச்சு படிச்சுப்பா. அதான்… நீங்கதான் வித்தியாசம். அதுவும் இவ்ளோ யங்கா, சாரி, சின்ன பொண்ணா இருக்கற நீங்க தமிழ்ல பாடறதோட பேசறீங்களே. ஐம் இம்ப்ரஸ்ட். ரொம்ப சந்தோஷம்.
ஓ, தட்ஸ் நத்திங். கான்வெண்ட்னாலும், வீட்ல தமிழ்தான்னே.
அதானே. நைஸ் டு ஹியர் தட். நான் தமிழ்ல சங்கீதம் பத்தி ஓரளவு எழுதுவேன். இந்த நிகழ்சிகளைத் தொகுத்து தமிழில் கட்டுரை எழுதலாம்னுட்டு. காம்பியர் பண்ணீங்களே. உங்ககிட்ட பர்மிஷன் வாங்கத்தான் கேக்கறேன். ஃபோட்டோஸ் கிடைக்குமா. விடியோ வேணாலும் எடுக்கறேன். அந்த தமிழ் பாட்ட இன்னொரு தடவ நீங்க பாடினீங்கன்னா கேட்டுண்டே இருக்கலாம் மிஸ்…
கலை.
வ், வாட். என்ன?
இல்ல. என் பேர் கலை. கலைவாணி. மிஸ் இல்ல…
ஓ, கலை. பேர்கூட பொருத்தமா. களையா. நீங்களேதான் இங்க நடக்கப்போற மத்த கச்சேரிகளையும் தொகுப்பீங்களா. மத்த கச்சேரிலலாமும் ‘பிரேயர் சாங்’ நீங்கதானா. அந்தப் பாட்ட இன்னொரு தடவை நீங்க பாடனும் நான் கேக்கனும். எப்ப பாட ரெடியோ சொல்லுங்க அப்ப வந்து விடியோ எடுத்துக்கறேன். என் ஸ்டுடியோவில கூட பாடலாம். உங்க சௌர்யம். நானே வீட்டுக்கு வந்து பிக் அப் பண்ணிக்கறேன்…
குறுக்கிட்ட மேனகையை கவனித்ததில் மீண்டும் எழுத்து என்னும் தவம் கலைந்தது. பாட்ரன் பாலாவை கவனிக்கத் தவறிவிட்டேன். என் கதை நாயகன் காரில் ஏறிப் போய்விட்டார்.
***
எப்படியோ அவர் அழைப்பை ஏற்று அவர் வீட்டை அடைந்தேன். என் வீட்டிற்கு போகும் வழியில்தான் ஏதோ ஒரு வளைந்த சாலையின் உள்மடிப்புகளில் அவர் வீடு.
வாட்ச்மேன் ஃபோன் மூலம் உள்ளே அழைத்துச் சரிபார்த்துக்கொண்டு சல்யூட்டுடன் பிரதான கோட்டைக்கதவைத் திறந்துவிட, வெள்ளை மாளிகையினுள் நுழைந்தேன்.
பாட்ரன் பாலாவின் சன்னமான வரவேற்பு அவ்வீட்டின் மிடுக்கைக் கூட்டியது. கூச்சமாய் செருப்பை குரோட்டன்ஸ் செடிகளுகிடையே கழற்றி, மிதியடியில் வெற்றுக்கால்களை ஓரிருமுறைத் தேய்த்து, வராண்டாவைக் கடந்து ஹாலில் நுழைந்தேன்.
அன்னாந்து பார்க்கும் உயரம்வரை பளீரென்று வெள்ளை. தேக்கு மர ஜன்னல்கள் கருஞ்சிவப்பில். ஹாலில் சட்டென்று கண்ணில் பட்டது அங்கு இல்லாதது. டிவிப் பெட்டி இல்லை. சோபாக்கள் இல்லை. பழங்கால மர மற்றும் பிரம்பு நாற்காலிகள்தான். ஆளுயர வெங்கடாஜலபதிப் படம். தஞ்சாவூர் பெயிண்டிங். சுத்தமான பிரேம். சுவரில் பதிந்திருந்த பெரிய அலமாரியை மூடியிருந்த தேக்கு மரத்தினாலான கதவுகள் ஜன்னல் சட்டத்தையொத்த கருச்சிவப்பில்.
பிரம்பு நாற்காலியில் அமர்ந்தேன். என் வீட்டிலும் அவ்வகை நாற்காலி ஒன்று உண்டு.
சற்று நேரம் சங்கீதம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அன்று நடந்த கச்சேரி. பாடகிகள். படோடோபங்கள். அக்கப்போர்கள்.
ஹாலின் ஒரு பக்கம் சிறு அறையைக் காட்டி அதுதான் அவர் எழுதும் இடம் என்றார் பாலா.
ஓ, சிறுகதைகள் எழுதுவது பொழுதுபோக்கு என்றது நிஜம்தானோ. அப்ப பேரிளம்பெண் பாடகியிடம் வழிவது வேறு சங்கதிகளுக்கா? மனதினுள் கருவி முகத்தினில் சிரித்தேன்.
“கொஞ்சம் இருங்கள். வேலையாள் போய்விட்டான். பத்மா தூங்கிட்டா. ஏதாவது ரிஃப்ரெஷ்மெண்ட்ஸ் கொண்டு வரேன்.”
பாலா ஹாலின் மறுபுறமாய் உள்ளே சென்றார்.
கொட்டாவியை அடக்கிக்கொண்டேன். எழுந்து கைகால்களை முறுக்கிவிட்டு, மனம் குறுகுறுக்க, சட்டென்று முடிவுசெய்து, பாலாவின் தனியறைக்குள் எட்டிப்பார்த்தேன். பெரிய தேக்கு மர மேஜயின் மீது புத்தகங்கள் கலைந்திருந்தன. மேலே சுவரில் நாற்புறமும் ‘போஸ்’ ஸ்பீக்கர்கள். ஒரு சுவர் முழுவதும் கண்ணாடிக் கதவுகளுடனான புத்தக அலமாரி. உள்ளே வழியும் புத்தகங்கள். மேஜையில் ஐ-பாட் உயிர்பெற்றிருந்தது. கச்சேரியில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தாரே. அருகில் திறந்திருந்த நோட்டுப் புத்தகத்தில் குண்டு குண்டாய் தமிழ் எழுத்து.
அவர் எழுதும் கதையா? ஆவலை அடக்கமுடியவில்லை.
கதையின் தலைப்பு “நியூட்டனின் மூன்றாம் விதி” என்றது.
வாசிக்கத்தொடக்கினேன்.
“ராம்போ ரமேஷிற்கு எழுத்தாளன் ஆகவேண்டும் என்பது சின்ன சின்ன ஆசைகளில் இருநூற்றி எழுபத்தி மூன்றாவது. முதல் பத்து ஆசைகளில் சினிமா நடிகன், இறைதூதன் சேர்த்து ராம்போ புகழ் சில்வஸ்டர் ஸ்டாலோன் போல ராஜா காலத்திய கிராப்பு வைத்துக்கொள்வதும் அடங்கும். நிறைவேற்றிவிட்டான். மிச்ச ஆசைகள் பெண்கள் பற்றியவை. அவை எதற்கு இங்கே. எழுத்தாளனைத் தொடர்வோம். அவன்தானே கதைகள் செய்பவன். எழுத்து ஒரு தவம் என்பதை பால்யத்தில் அறிந்துகொண்ட ரமேஷ், வயதிற்கு வந்தபின்பும் தவம் செய்ய முனையவில்லை. குறுக்கிட்ட மேனகைகளை கவனிக்கவே நேரமில்லை அவனுக்கு. ஆனால் சங்கீதத்தில் கெட்டி…”
சொல்வனத்தில் மேய்ந்து சம்பவங்களில் ஊடாடுகையில் ஆளுமை திரண்டது. மோட்டு நெத்தியாம், வசீகர முகமாம், மயக்கும் புன்னகையாம், கலகல பேச்சாம்… இது பாலாவேதானா? கதை சாக்கில் சுயமைதுனமா? இல்லையே நான்தான் அவரை கவனித்து நிஜம்போல எழுதி வருகிறேனே. என் கதையில் அவருக்கு மோட்டு நெத்தி கிடையாதே. வயதான வெள்ளை முடி கிராப் ஆயிற்றே…
ஓரிரு பத்திகள் தவ்வி வாசித்தேன்.
“அகர முதல எழுத்தை அளிப்பவன் மும்மூர்திகளின் வடிவம். பேரன்பினால் தன்னையே கூறுகளாக்கி எழுத்தில் அளிப்பவன். விளைவாய், வாசிப்பவன் அச்செயலை பூர்த்திசெய்கிறான். செயல் இல்லையேல் விளைவில்லை. விளைவற்ற செயல் செய்யப்பட்டது என்றறிவது எவ்வாறு? நியூட்டனின் மூன்றாம் விதியும் இதுதானே. பரமாத்மனுக்கும் ஜீவாத்மனுக்கும் அகர முதல எழுத்தில்தான் இணைபிரியா பந்தம்…”
பாலாவின் கற்பனையா? இவர் எப்போது இத்தனைத் தீவிரமாகத் தவம் செய்தார்?
வாசிப்பைத் தொடர்ந்தேன்.
கண்ணாடியில் படர்ந்திருந்த நீராவி மெள்ளக் குளிர்ந்து, பிம்பங்கள் புலனாகத் தொடங்கியது.
“அவனுக்குக் கலையை கவனிக்கும் கண்கள். அதுவும் கலைகளின் உறைவிடங்களான கலைவாணிகளைக் கண்டவுடன் களையும் கண்கள்…வெள்ளைக்கதர் சட்டையில், கிரீம் கலர் பாண்டின் பாக்கெட்டுகளில் ஸ்டைலாய் கைகளை நுழைத்தபடி பேசிக்கொண்டிருக்கிறானே, அவளை எப்படியும் ஓரிரு கச்சேரிகளுக்குள் கட்டியிருக்கும் பச்சைப்பட்டு நெகிழ தன்னிடம் வீணையை மீட்டவைத்துவிடுவான்.”
அட இது என்ன? கூட இருந்து பார்த்த மாதிரி…
பளாரென்று இருகன்னங்களிலும் ஒருசேர அறைவாங்கி ஜிவ்வென்றானது.
நடுங்கும் கைகளால் நோட்டுப்புத்தகத்தை மூடி மேஜையில் முன்பிருந்தபடியே வைத்தேன். மூச்சைப்பிடித்தபடி தத்தித் தத்தி வந்து என் பிரம்பு இருக்கையினுள் பூதானமாய் அமர்ந்தேன்.
திக்திக்கென்றது. உள்ளே ஏதோ விழித்துக்கொண்டது போலானது. வெளியே மழை ஓய்ந்தது எப்போது? வீட்டில் என் அபிமான பிரம்பு நாற்காலியில் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு தவமிருக்கிறேன். வியர்த்தாலும், உடலை லேசான பெருமிதத்துடனான நிம்மதி நனைக்கிறது.
என்னிடம் அவர் வரவை எதிர்நோக்கினேன்.
***
கதை முடிந்த களைப்பில் பாலகிருஷ்ணன் பிரம்பு நாற்காலியிலேயே தூங்கிப்போனார்.
http://www.wikipaintings.org/en/m-c-escher/drawing-hands